திருமூலரின் கடவுள் விளக்கம்-3
16.சிந்தையது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளிய, தெளிய வல்லார்க்கு
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.
(சிந்தை பல வகைப் படும். உயர்ந்த, தூய்மையான சிந்தனைகளில் தெய்வத்தைப் பற்றிய சிந்தனையும் ஒன்று.சிந்தனையில் இறைவனைப்பற்றி படித்ததையும், கேள்விப்பட்டதையும், பார்த்ததையும், அனுபவபட்டதையும் கலந்து மனத்துள் விவாதித்து தெளிவடையும் போது, அவரவர் சிந்தனையில் தெய்வம் (சிவம்)இப்படித்தான் இருக்கும் என்கிற புரிதல் வெளிப்படும்.)
17.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்ற தலைப்படும் தானே.
( உடலுக்கு உணர்வு தரும் ஒரு மந்திரத்தை( உ-ம் : ஓம்/ சிவாய நம/முருகா) சிந்தித்து, தெளிந்து, நம்பிக்கை வைக்கும் அந்த மந்திர சொல்லை உடல் பற்றிக்கொள்ளும் போது, பிரபஞ்சத்தில் மறைபொருளாக இருக்கும் தெய்வீக ஆற்றலை உணரும் பக்குவம் தானே ஏற்படும். நான் பின் பற்றிய இந்த வழியை இவ்வுலகத்திற்கும் சொல்கிறேன்)
18.அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப் பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப் பரிசு ஈசன் அருள் பெறலாமே.
( அப்பா போன்றவனை,அமுதம் போன்றவனை, நிகரில்லாதவனை,நெடுங்காலம் உடையவனை எப்படியாவது போற்றி, வணங்குங்கள். அப்படி செய்தால் அதற்கு பரிசாக இறைவன் அருள் புரிவான்.)
19.அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே.
(அன்புவேறு, இறைவன்வேறு என்று நினைப்பவர்கள் உண்மை தெரியாதவர்கள்.
அன்பாய் இருப்பதும், இறைவனை வழிபடுவதும் ஒன்று என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
அன்பு காட்டுவதும், இறைவனை நினைப்பதும் ஒன்றுதான் என்று தெரிந்தவர்கள்
எல்லா உயிர்களையும்,உயிர்களுக்கு ஆதாரமான இயற்கையையும் இறைவனாக எண்ணி நடப்பார்கள்.)
20.உறுதுணை ஆவது உயிரும் உடம்பும்
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி
செறிதுணை ஆவது சிவனடி சிந்தை
பெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.
( வாழ்க்கையில் முக்கியமானது என்று எதை,எதை யெல்லாமோ தேடுகிறோம். அந்த தேடல்களுக்கெல்லாம் துணையாக இருப்பது இறைவன் அளித்திருக்கும்உயிர்,மற்றும் அந்த உயிர் தங்குவதற்கு ,ஏற்ப ஆரோக்கியம் பேண வேண்டிய உடல். உலகிலுள்ள நல்லோர்கள் சொல்லும் வழிகளை கேள்வி கேட்டு புரிந்து கொள்வது துணையாக வரும். இறைவனை சிந்திக்கும் பழக்கம் நல்ல துணையாகும். துணை செய்யும் இறைவனிடம் மீண்டும் பிறவாமை கேட்க வேண்டும்.)
21.சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலார்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பாரே.
( எல்லா மனிதருள்ளும் இறைவன் இருக்கிறான்.
எல்லா மனிதரும் தன்னுள் இறைவன் இருப்பதை அறிவதில்லை.
தன்னுள் இறைவன் இருப்பதை அறிந்தவர்கள் பற்றற்று எளிமையாய் இயற்கைக்கு எந்த கேடும் செய்யாமல் இருப்பார்கள்.)
22.மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நாறாயிரத்து ஒன்றே.
( கோவின் மயிரொன்று= பசு வின் முடி ஒன்றை எடுத்து.
அந்த முடியின் சுற்றளவு= 50 மைக்ரான்
100 மைக்ரான்= 0.1 மில்லி மீட்டர்
50. "
= 0.05.
"
அதை நூறு கூறாக்கினால்=0.05/100=0.0005 மி.மீ
அதை ஆயிரம் ஆக்கினால்=0.0005/1000=0.0000005மி.மீ
அதை நாறாயிரம் ஆக்கினால்=0.0000005/4000=0.000000000125மி.மீ
இது தான் சிவனின் / சீவனின் வடிவு என்று திருமூலர் சொல்லி இருக்கிறார்.
இன்னறைய விஞ்ஞானிகள் நியுட்ரினோ என்று தேடுவதும் அதைத் தானோ.)
23.நிற்கின்ற போதே நிலையுடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்றிலாத மணி விளக்காமே.
( நிலைத்து நிற்பவனாகிய இறைவனை நல்ல நிலையில் இருக்கும் போதே அறிந்து, உணர்ந்து,பணிந்து, தொழுவதால் பாவங்கள் அனைத்தும் அறுந்து போகும். இறைவனை போற்றி, வாழ்த்தி வணங்குவதை சோர்வு படாமல் செய்யுங்கள். அப்போது ஒப்பற்றஞானம் பிரகாசமான விளக்கைப் போன்று உதவும்.)
24.எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளி பெற நோக்கினால்
கண்ணாடி போல கலந்து நின்றானே.
( பல்லாண்டு வாழும் பிராப்தம் இருந்தாலும் கண்ணில் ஜோதியாக இருந்து விளங்கும் இறைவனை கண்டு அறிபவர்கள் யாரும் இல்லை.உள்ளத்தில் ஒளியாய் பார்க்கும் பக்குவம் அடைந்தவர்கள் கண்ணாடியில் உருவத்தை காண்பது போல இறைவனை காண்பார்கள்.)
25.வைத்துணர்ந்தான் மனத்தோடும் வாய்பேசி
ஒத்துணர்ந்தான் ஒரு ஒன்றோடொன்று ஒவ்வாது
அச்சுழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந்தார்க்கே நாணுகலுமாமே.
(தங்கள் மனமும், வாக்கும் ஒன்றோடொன்று பேசி ஒத்திருக்கும் உயிர்களிடத்தே இறைவன் நெருங்கி இருப்பான். மனமும், வாக்கும் ஒத்துப் போகாத உயிர்களையும் அவன் அறிகிறான்.மனம் கலங்கி இருக்கும் அந்திம காலத்திலும் அவனை சரணடைந்தால் நெருங்கி வரக்கூடியவன்)
26.குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத்தாமே.
(பிறவி எடுத்து பாவக்கணக்கை அறுக்க
நல்ல குரு கூறும் வாழ்க்கைப்பாதையில் வாழ்ந்து
வாழ்க்கையை உய்விக்க மனத்தாலும்,வாக்காலும் அஞ்செழுத்தான சிவாயநம -வை உச்சரிப்பதாகும்.)
27.அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசை தோறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புடனே வந்து எய்திடும் முக்தியே.
(மனமாகிய பொன் விளக்கில் அன்பு என்னும் நெய் ஊற்றி, பிறருடைய துன்பமெல்லாம் நீங்கி அவர்கள் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்று வேண்டி,தூப,தீபங்களில் நறுமண புகையும், ஒளியும் எல்லா திசைகளிலும் பரவும் படி எல்லாருக்காகவும் வழி பட வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரும்.)
28.என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன் போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என் போல் மணியினை எய்த வெண்ணாதே.
( எலும்புகளை விறகாக்கி அந்த நெருப்பில் உடல் சதையை அறுத்து வறுத்து எடுப்பதுப் போல் கடுமையாக தவம் செய்தாலும் இறைவனை உணர்ந்திட முடியாது.உள்ளத்தில் அன்பினால் அகம் குழைந்து இறைவனிடம் பணிபவர்களுக்குத் தான் எனக்கு கிடைத்தார் போல் இறைவன் அருள் கிடைக்கும். உள்ளத்தில் தன்னலப் பற்றை நீக்கிய அன்பு நிலையே உள்ளம் உருகிய நிலை.)
29.எளியவாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்
தெளிய ஓதி சிவாய நம என்னும்
குளிகை இட்டுப் பொன்னாக்குவேன் இக் கூட்டையே.
(கடவுள் இருப்பை வீணாக விவாதம் செய்வதை விட்டு விட்டு, அறிவு ஒளியாகிய இறைவனை சிவாயநம என்று தெளிவாக ஜபம் செய்தால் மனம் அந்த ஒளியை நோக்கி முன்னேறும்.இரச குளிகையால்செம்பிலுள்ள களிம்பு நீங்கி செம்பு பொன்னாவது போல உயிரானது சிவமாகும்.)
30.ஆவன ஆவ, அழிவ அழிவன
போவன போவ, புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி, காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.
( வர வேண்டியவை தானே வந்து சேரும். நீங்க வேண்டியவை தானே நீங்கி விடும். கழிய வேண்டியவை தானே கழிந்து விடும். அனுபவிக்க வேண்டியவை தாமே வந்து சேரும்.
வருவது வரட்டும் என்று நெறியுடன் இருப்பவனை இறைவன் நந்தி வழிநடத்துவான்.)
...........தொடரும்...4
No comments:
Post a Comment