Tuesday 29 September 2015

நலமான வாழ்விற்கு அவரவர் பங்கு

        நலமான வாழ்விற்கு  அவரவர்  பங்கு 

சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதஇனம் வெட்ட வெளியில், மரநிழலில் வாழ்ந்து வந்தது. காய்,  கனி, கிழங்குகள் மட்டுமே உணவாக இருந்தது. உணவைத் தேடுவது தான்  அன்றாடம் உள்ள ஒரே பிரச்சினையாக இருந்தது. ஆனால், இன்றோ பொருள் தேடும் பிரச்சினை, உடல் நலப் பிரச்சினை, உறவுகளில் பிரச்சினை, சுற்றுப்புற சுகாதாரப் பிரச்சினை என பலவகையான பிரச்சினைகளால்  மனிதன் வாழ வேண்டி யுள்ளது. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அல்லது யாராக இருந்தாலும் தனது உடல் நலத்தை பேணி, பாதுகாத்து, நலமாய் இருப்பதில் கண்ணும்,  கருத்துமாய் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆரோக்கியத்தை காக்கும் முயற்சியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியது அனைவரின் கடமையும், பொறுப்புமாகும்.

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் மனித இனம் மட்டுமே "சிந்தனையும் செய்கையும்" உடையதாய் இருக்கிறது. இந்த சிந்தனை செயல் இயல்பைக்கொண்டு மனிதன் தன அருகில் கிடைத்த பொருள்களில் மாற்றங்கள் செய்து தனது தேவைகளை எளிதாக அடைய வழிகண்டான். அதற்கு, வளர்ச்சி, முன்னேற்றம், நாகரீகம்  என்று பெயரிட்டுக்கொண்டான். இயற்கையிலுள்ள பொருட்களையும், நடப்புகளையும் பலதையும், பலவாறு ஆராய்ந்தான். அதனதன் தன்மைக்கேற்ப கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம்  என்று பல  பிரிவுகளாக்கிக் கொண்டான், தனது ஆராய்ச்சியை வளர்த்துக்கொண்டே போனதினால் உலகம் இன்று தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி கிடக்கிறது.

இந்த பூமியில் உயிரினங்கள் தோன்ற அதன் தட்ப, வெட்ப நிலையே காரணம். சாதக மான தட்ப வெட்ப நிலைக்கு மரங்களும், காடுகளுமே முக்கிய காரணம். பூமியின் நில பரப்பில் பெரும்பாலான இடங்கள் செடி, கொடி, மரங்களால் அடர்ந்திருந்த காரணத்தால் மழைக்கு குறைவே இல்லாமல் இருந்தது. பூமியில் பெரிய நதிகளும், ஆறுகளும் ஏற்பட்டன. உயிரினங்கள் தோன்றின. மனித இனமும் தோன்றியது. மனிதன் மர இலையை ஆடையாக உடுத்திக்கொண்டான். ஆயுதமாகவும், விறகாகவும், வண்டியாகவும், படகாகவும்,  வீடாகவும், பாலமாகவும் என மரங்களை பலவாறாக உபயோகித்துக்கொண்டான். மரங்களையும் காடுகளையும் அழித்து தனது தேவைகளையும், ஆடம்பரங்களையும் பெருக்கிகொண்டான். மலைக்காடுகளை  அழித்து  பணப்பயிர்களாக மாற்றிக்கொண்டான்.

மனிதன் காடுகளை வெட்ட, வெட்ட பூமியின் தட்ப, வெட்ப நிலை மாற ஆரம்பித்தது. மறுபக்கம் மனிதனின் ஆராய்ச்சி  யினால் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்தது. உயிரினங்களுக்கான சாதகமாய் இருந்த தட்ப, வெட்பம் மாறியது. உயினங்களுக்கு கெடுதல் செய்யும் கிருமிகள் உற்பத்தியாயின. கூடவே மருத்துவ விஞ்ஞானமும் வளர்ந்தது. பலவித கெடுதல் செய்யும் இரசாயனங்கள் பூமியிலும், கடலிலும், ஆகாயத்திலும் கொட்டப்பட்டன.கடந்த நூறாண்டு காலத்தில் நடத்தப்பட்ட இந்த செயல் களினால் இன்று கற்று, நீர், நிலம், வெப்பம், கதிர்வீச்சு அனைத்தும் மனிதனுக்கும், பிற உயிரனங்களுக்கும் கெடுதல் செய்வதாய் மாறி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் அதை குணப்படுத்தும் மருத்துவ மனைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

இது தான் இன்றைய சுற்றுப்புறம். இதிலிருந்து மனிதனும் பிற உயிரினங்களும் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு ஒன்பது  வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது .

1.உடல் ஆரோக்கியம் :- ஒவ்வருவரும்  தனது  உடல்  இயங்கும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். சரியான உணவை  உண்பது, தினசரி தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை உடலின் இயக்கம் சரியானபடி நடக்க உதவும். போதை ஏற்படுத்தும் மாத்திரை, மது போன்ற வற்றை தவிர்ப்பதும்,  நோய் மற்றும் உடல் நலக்குறைவில்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாகும் .


2.மனஆரோக்கியம்:- தினசரி மாறி வரும் நமது சூழ்நிலைகளிலுள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டும், தனது தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காக அனைத்தையும் அனுசரித்தும் வாழ்வதே மன ஆரோக்கியம்.

3..உணர்ச்சிகள் ஆரோக்கியம்:- நாம் உணர்ச்சிவயப்படும் போது வெளிபடுத்தும்  உணர்ச்சிகள் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டுமே தவிர கெடுதல் செய்வதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே உணர்ச்சிகள் ஆரோக்கியம் .

4.சமூக ஆரோக்கியம்:- வீட்டிலுள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் அண்டைவீட்டாரிடமும், நண்பர்களிடமும் பணி இடத்திலும், மற்றும் நாம் உறவாடும் அனைவரிடமும் நாம் வைத்திருக்கும் உறவின் தரம்  சமூக ஆரோக்கியமாகும்.

5.சுற்றுப்புற ஆரோக்கியம் :-  கற்று, நீர், மண் மற்றும் நாம் வசிக்கும் இடத்தின் சுற்றுவட்டாரத்தை வளமாகவும், மகிழ்ச்சி தரகூடியாதகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது சுற்றுப்புற ஆரோக்கியமாகும் .

6.நிதி ஆரோக்கியம் :- பணம்  இல்லையானால் அமைதியும், மகிழ்ச்சியும்  வாழ்க்கையில் இருக்காது.சரியாக திட்ட மிடல், கடின உழைப்பு, சிக்கனம் சேமிப்பு, முதலீடு என தேவைக்கேற்ப பணத்தை பெருக்கிக் கொள்வதே
 நிதி ஆரோக்கியமாகும்

7.தொழில்  ஆரோக்கியம்:-    ஏதாவது ஒரு தொழிலில் நம்மை  ஈடுபடுதிக் கொள்கிறோம். வேலையில் நமக்குள்ள விருப்பம், நமது திறமை வேலையிடத் துள்ள நல்ல சூழ்நிலை, திருப்தியான வருமானம் மற்றும் வசதிகள் ஆகியன தொழில் ஆரோக்கியமாகும் .

8.ஆன்மீக ஆரோக்கியம்:-  பிற உயரினங்களின் உரிமைகளை மதித்தும் அவை மகிழ்ச்சியுடன் வாழ விருப்பம் கொண்டும் அவைகளுடன் இணக்கமாய் இருந்து இந்த ஆன்மீக நோக்கத்தை அறிந்து, ஆன்மீகப் பாதையில் வாழவேண்டும்.இயற்கையின் நியதிகளை உணர்ந்து அதற்கு பணிந்து வாழ்வதே  ஆன்மீக ஆரோக்கியமாகும்
                     
9.அறச்செயல் ஆரோக்கியம்:- மனிதன் மனம் போன போக்கில் போககூடியவன். ஆணவம், சுயநலம், பொறமை, சாமர்த்தியப்பேச்சு என்பன தன்னுள் இருப்பதை  அறியாதவன். அதன் விளைவு களில் சிக்கி வாழ்க்கையை களிப்பவன். எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற குணங்கள்  தான்  இந்த இயற்கையையும் தன்னையையும் சிறப்பாக வாழவைக்கும்.என்பதை அலட்ச்சிய படுத்தி வாழ்பவன். நீதி நெறியுடன் (ethics) நன்னடத்தையோடு(moral) நன்மதிப்புடன்(value)  உலகம் போற்றும்  நல்ல குணங்களை கொண்டிருப்பதே அறச்செயல் ஆரோக்கியமாகும்.

 சிறந்த உடல் நலம் பெற சரியான ஆரோக்கியத்திர்க்காக சிரமப்படவேண்டும் மேற்கூறிய பிரிவுகளில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை பாதிக்கலாம் இதனால் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்த அனைத்து பிரிவு களையும் புரிந்துகொண்டு சரியாக நடக்கும் ஒருவர் சிறந்த உடல் நலம் பெற்று சாதிப்பவராவார்.

எல்லா நேரமும் எல்லா பிரிவுகளையும்ஒருவரால் சிறப்பாககடை பிடிக்க முடியும்  என்பது உண்மையில் நடக்ககூடிய காரியமல்ல. எந்த ஒருவரும் முழு ஆரோக்கியமுடையவர் என்றோ, முழு ஆரோக்கியம் இல்லாதவர் என்றோ இருப்பதில்லை.

நல்ல ஆரோக்கியம் முதல் மரணம் வரை உள்ள இடைப்பட்ட ஒரு இடத்தில நம் ஆரோக்கியம் இருக்கிறது.

ஆரோக்கியத்துக்குரிய நடவடிக்கைகளை அதிக அளவு தேர்ந்தெடுத்து செயல் படுத்துவது நல்லது

நல்ல ஆரோக்கியத்தை நாடி அந்த வழிகளை கடைபிடிக்கும் குணாதிசயங்கள் நமக்கு இருக்க வேண்டும்.

அடுத்ததாக ஆரோக்கியம் என்பது சத்து, உடற்பயிற்சி, ஓய்வு, பிறவிக்குறைபாடுகள் சம்பந்தப்பட்டது.

நம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும், தாவரங்கள் மற்றும் தண்ணீரிலிருந்து கிடைகிறது.

சத்துகள் பலவகையானது. அவை, கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள் முதலியன. நார்ச்சத்தும் மிக முக்கியமானது.

கார்போஹைட்ரேட்டை தனித்த கார்போஹைட்ரேட் (Simple carbohydrate)   என்றும், கலவை கார்போஹைட்ரேட் (Complex carbohydrate) என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள்.

சீனி, வெள்ளை அரிசி, மைதா போன்ற இயந்திரங்களில் சுத்திகரிக்கப்பட்ட, அதாவது அதிலிருந்த பல சத்துக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டை தனித்த கார்போஹைட்ரேட் என்கிறார்கள். இவ்வகை உணவுகள் ஜீரணித்து இரத்தத்திற்கு வரும்போது அதிக அளவு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் கிடைக்காத போது இரத்தத்தில் சுகராக அதிகரிக்கிறது. தேவைக்கு அதிகமான இனிப்பு கொழுப்பாக மாறி உடலில் தேங்கி உடல் எடை அதிகமாக்குகிறது. இவ்வகை உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

தவிடுடன் கூடிய அரிசி, முழுக்கோதுமை, கரும்புச்சாறு, முழுபழங்கள், போன்றவை களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என்பவைகளுடன் கார்போஹைட்ரேட் சேர்ந்திருப்பதால் இதை  கலவை கார்போஹைட்ரேட் என்கிறார்கள்.இவ்வகை உணவுகள் ஜீரணித்து இரத்தத்திற்கு வரும்போது இன்சுலின் ஒரு சீராகவே தேவைப்படுகிறது. இரத்தத்தில் சுகர் சீராக இருக்கிறது. நார்ச்சத்து ஜீரணத்தை மெதுவாககுவதால் பசிகுறைந்து  உடல் எடை குறைகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு இன்சுலின் தேவைப்படுவது  போன்று புரோடீன், கொழுப்பு உணவுகளுக்கு இன்சுலின் தேவை இல்லை. கடலை,பருப்பு,பயறு,கொள்ளு,ஓட்ஸ் போன்றவை புரத சத்து நிறைந்தவை.

கொழுப்பும் உடலுக்கு தேவையான ஒரு சத்து ஆகும்.கொழுப்பிலும் பிரிவுகள் இருக்கிறது.கரையாத கொழுப்பு(Saturated fat), கரையும்  கொழுப்பு(Unsaturated fat),  மாறிய கொழுப்பு (Trans fat) என மூன்று வகைப்படும்.

பால் உட்பட அனைத்து மிருக வகை இறைச்சி களிலும் உறையும் கொழுப்பு இருக்கிறது. கோழியின் தோலிலும், முட்டை மஞ்சள் கருவிலும்  உறையும் கொழுப்பு இருக்கிறது. இவை இரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இவ்வகை உணவுகளை மிகக்குறைவாகவே உண்ணவேண்டும்.

மாமிச உணவுகளும், தின்பண்டங்களும் சூடான எண்ணையில் வறுத்து செய்யும் போது  மிகவும் ருசியாக இருக்கிறது. எண்ணெயை சூடாக்கும் போது அது மாறிய கொழுப்பாகி விடுகிறது. உணவகங்களில் அதே எண்ணையை திரும்ப,திரும்ப சூடாக்கி உணவு தயாரிக்கிறார்கள். ஆனால், நாம் உணவகங்களில் வறுத்த உணவுகளையே மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறோம். மாறிய கொழுப்பு இரத்தில் நல்ல கொழுப்பை குறைத்து (HDL), கெட்ட கொழுப்பை (LDL) அதிகப் படுத்தி விடுகிறது. கெட்ட கொழுப்பு இரத்த குழாய்களில் தேங்கி இரத்தப் போக்கை தடை செய்து நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

தாவரங்கள் மூலம் உடலுக்கு கிடைக்கும் கொழுப்பு கரையும்  கொழுப்பாகும். ஆழிவிதை, வால்நட், திராட்ஷைவிதை, பூசணி விதை, பாதாம்,  முந்தரி, எள்ளு, தேங்காய் போன்ற நட்ஸ், சீட்ஸ் மூலம் சுத்திகரிக்காமல் கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். இரத்தத்தில் LDL ஐ குறைத்து, HDL ஐ அதிகப் படுத்தும்.  கரையும் கொழுப்பு உணவுகளையும் சாப்பிட்டு, கரையாத  கொழுப்பு உணவுகளையும் சாப்பிடுவதால் மொத்த கொழுப்பும் அதிகமாகும்.

நமது தினசரி உணவில் முழுத்தானியம், கீரை, காய், கனி, நட்ஸ், பயறு, பருப்பு, கடலை  போன்றவை களுடன், மூன்று லிட்டர்  தண்ணீரும் குடித்து வந்தால், உடலுக்கு தேவையான எல்லா வைட்டமின்களும், தாதுக்களும், நார்ச்சத்தும் கிடைத்துவிடும்.


அடுத்து, உடற்பயிற்சி. மனிதனின் தொழில்நுட்பம் அவனை அசைய விடாமல்  உட்காரவைத்து அவனுடைய அனைத்து வேலைகளையும் செய்து தருகிறது. உட்கார்ந்தே இருப்பதால் தசைகளும், மூட்டு இணைப்புகளும் விறைப்பும்,  பலவீனமும் அடைந்து போகின்றன. உடல் எடை கூடுகிறது. பலவித ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட காரணமாகிறது. உடலானது நடக்கவும், ஓடவும் போன்ற தீவிர அசைவிற்காக படைக்கப் பட்டிருக்கிறது. அப்படி உடற்பயிற்சி செய்வதால், இரத்தத்தில், LDL குறைந்து, HDL அதிகமாகும்.  தினமும் அசதி ஏற்படும் படியான உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமானது. காலை நேரம்  இருபது நிமிடம் கை, கால் அசைவுதரும் யோகப் பயிற்சி செய்வது உத்தமம்.

உறக்கம், ஓய்வு, பொழுபோக்கு, ஆசுவாசம் போன்றவை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை தரவல்லது. தியானம், மூச்சு பயிற்சி போன்றவை மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை களுக்கு நிவாரணமாகும்.  

பூச்சிக்கொல்லி இரசாயனம், சோப்பு, குளோரின், இங்க், பெயின்ட், பிளாஸ்டிக், கருகிய உணவுகள், கெட்டுப்போன உணவுகள்,  மாத்திரை, நச்சுக் காற்று, நச்சுத்  தண்ணீர் போன்றவை நம் உடலுக்குள் எப்படியாவது போய்விடுகின்றன.  அவை நல்ல செல்களையும் நோய்ப் படுத்தி அழித்து விடுகின்றன. இது பலருக்கும் பலவிதமான நோய் ஏற்பட காரணமாகும். அவைகளை இராணுவப்படை போன்று எதிர்த்து அழிப்பது வைட்டமின் A E C ஆகும். இந்த வைட்டமின் களை நச்சு தன்மை எதிரி (Anti Oxidant)   என்கிறார்கள். இஞ்சி, மஞ்சள், பூண்டு, காய், கனி, கீரை, மூலிகை களில் இவ்வகை வைட்டமின்கள் இருக்கின்றன.

உண்பதும், உழைப்பதும், உறங்குவதும் தினமும் நடந்து விடுவதால மட்டும் நல்ல ஆரோக்கியம் என்று சொல்லிவிடமுடியாது. உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சுகர், கொலஸ்ட்ரால் போன்றவை எந்த அறிகுறியையும் தராமல் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டிருக்கும்  

குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர் ஆலோசனையின்படி மருத்துவ சோதனைகளை செய்து உடல் நலத்தை பராமரித்துக்கொள்ளவேண்டும்.

பூமியின் வெப்பம் குறையும் அளவிற்கு, காலியான இடம் என்பதே இல்லாமல், அனைத்து இடங்களிலும் ஓங்கி வளரும் மரங்களை வளர்த்து விடவேண்டியது மனிதனின் கடமை.

ஆண், பெண் இருபாலரும் சைக்கிளை தினமும் பயன் படுத்த வேண்டும். இது உடற்பயிற்சிக்கும், சுற்றுப்புற மேன்மைக்கும் நல்லது.

இரசாயனம், பிளாஸ்டிக் பயன் பாட்டை குறைத்து அதன் கழிவுகளை கண்டபடி எறிந்து மண்வளத்தை மாசு படுத்தாமல்  காக்கவேண்டும்.

போதை வஸ்துக்கள், மதுப்பழக்கம் போன்றவை நண்பர்கள் மூலமே ஆரம்பிக்கும். அடிமையாக்கும் இந்த பழக்கம் பல பேர் ஆரோக்கியத்தையும், குடும்பத்தையும் கெடுத்து வருகிறது. மதுவை பழகாதவர்கள் யோகம் செய்தவர்கள்.

தயார் உணவு, துரித உணவு, பாட்டில் பானம், இறக்குமதி உணவு அனைத்திலும்  ஏதாவது ஒரு வழியில் இரசாயனம்  கலந்து  விட  சந்தர்ப்பம் உள்ளது என்கிற நினைவுடன் அம்மாதிரி உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் முயற்சிக்க வேண்டும்.


உண்ணக்கூடிய உணவுகளையும், உண்ணக்கூடாத உணவுகளையும் தெரிந்து, புதிய உணவுப்பழக்கத்திர்க்கு மாறுங்கள். சரியான உணவுப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதற்கு மன ஒத்துழைப்பு மிக அவசியம்.

சரியான் உணவு எது, தவறான உணவு எது என அறிந்து உண்பதே ஆரோக்கியம். நல்லதே ஆனாலும் அளவோடு உண்பதே ஆரோக்கியம். நல்ல உணவுகளையும் மாற்றி, மாற்றி உண்பதே ஆரோக்கியம். பொதுவாக, சரியான  உணவுகளை, சரிவிகித மாய், சரியான அளவுக்குள் உண்பதே ஆரோக்கியம்.

தினசரி உணவில் காய், கனி, கீரை, கடலை, பருப்பு, பயறு, முழுத்தானியம், சிறுதானியம், நட்ஸ், வித்து  போன்றவை அதிக அளவும், தனித்த கார்போஹைட்ரேட் மற்றும் கரையாத  கொழுப்பு உணவுகள் மிக குறைவாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உப்பு, சீனி, மாறிய கொழுப்பு உணவுகளை அதிகமாய் உண்பதால் குணப்படாத நோய்கள் ஏற்பட காரணமாகும்.

தவாறன தின்பண்டங்களை வீட்டில் அதிகம் இருப்பு வைத்திருப்பது அதை அதிகம் உண்ண வேண்டிவரும்.

தாகத்திற்கு என்றில்லாமல் தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இருபது வயதுகளில் உடல் முழுவளர்ச்சியினை அடைந்து விடுகிறது. அதனால், அதன்பிறகு உடலுக்கு சற்று குறைவான அளவு உணவே தேவைப்படுகிறது. உணவின் தன்மைக்கேற்ப உடல் உழைப்பு இல்லாத போது நாற்பது வயதுகளில் அதிக உடல் எடை, பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

முன்னால் இருக்கிறது என்றோ, தருகிறார்கள் என்றோ,  நிர்பந்த படுத்தினார்கள் என்றோ, வீணாகி விடும் என்றோ கெடுதலான உணவுகளை உண்ணக்கூடாது.

அசுத்தக் காற்றை சுவாசிப்பதினால் ஆரோக்கிய குறைவு ஏற்படுகிறது. மருத்துவம் கூறும் துணியினை மூக்கில் கட்டிக்கொள்வது பயன் தரும்.

போகிற இடங்களில் கிடைக்கும் நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பது மிகவும் நல்லது. உடலால் நீரை சேமித்து வைக்க முடியாது. உடலில் நீர் குறைவு ஏற்படாமல்  அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

சூரிய ஒளியில் நடமாடாதவர்களுக்கு வைட்டமின் D  மற்றும் கால்சிய சத்தில் குறைவு ஏற்படலாம்.

மண் என்பது அழுக்கானதல்ல. இயக்க மற்றது மல்ல. மண்ணின் வளம் குறையும் போது மனிதனின் ஆரோக்கியம் கேள்விக் குறியாகி விடும்.

மாத்திரை சாப்பிடுகிறேன், உடற்பயிற்சி செய்கிறேன் என்று நினைத்து  உப்பு, இனிப்பு, கொழுப்பு உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது.

தன்னுடைய ஆசைகளை  குறைத்து, அடுத்தவர் உரிமைகளை மதித்து, தவறுகளை எதிர்த்து,  நியாயத்துக்கு பணிந்து  வாழ்வது நல்ல மன நலத்தை தரும். நல்ல மன நலம் உடல்நலத்தை மேம்படுத்தும்.

கல்வி, செல்வம், உடல்நலம், குணம், மகிழ்ச்சி என அனைத்திலும் விதி, முயற்சி  என்கிற இரு பெரும் சக்திகள் அவரவருக்கென  வித்தியாசங்களில் அவரவர் வாழ்க்கையை நடத்துகிறது என்கிற உண்மையை புரிந்து, எளிமையாய் வாழ்வதில் விருப்பம் கொள்ளவேண்டும். எளிமையே இயற்கையையும், வாழ்கையையும்  வளமாக்கும்.

உடல் நலத்திற்கு என நடைபெறும் சொற்பொழிவுகள், கண்காட்சிகள் போன்ற வற்றில் கலந்து கொண்டு மாறிவரும் சூழலில் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.