ஆன்ம தரிசனம்
உலகில் பலவித குணங்களுடைய, உயர்வு, தாழ்வு உடைய மனிதர்கள் வாழ்ந்து மடிவதை அறிவோம். இதில் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு பிரிவு லொளகீக வாழ்க்கை வாழும் மனிதனுக்கு துறவற வாழ்க்கை வாழ்ந்த மகான்கள் தரும் பாடம்.
உயிரினங்களில் மிக உயர்ந்தது, சிறந்தது என்பது மனித இனமாகும். பரம்பொருள் அல்லது இறைவன் கூட அனுபவம் பெறவேண்டுமானால் மனிதப் பிறவி எடுக்க வேண்டும். மனிதனால் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.
இறைவன் என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தருக்கும் உணர்ச்சியுள்ள, கண்ணுக்கு தெரியாத சர்வசக்தி.
தன்னைப் பற்றி சிந்தித்த வண்ணம் செயல் பட்டவர்கள் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்கள். உலகக் காட்சியில் அவர்களுக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. தாங்கள் மேற்கொண்ட வைராக்கியத்தால் பிறரால் நம்ப முடியாத, காணமுடியாத உண்மைகளை கண்டார்கள். அதில் ஒன்று தான் ஒவ்வொரு உயிரும் ஆன்மா என்னும் தெய்வத்துளியினால் ஆனது என்பது.
உலகக் காட்சிகளை உண்மை என்று நம்பி அதன் மீது பற்று கொண்டவர் களுக்கு தன்னுள் ஆன்மா இருப்பது புரியாது. தன்னுள் ஆன்மா இருப்பதை புரிந்தவர்களுக்கு வெளிக் காட்சிகளால் எந்த பயனும் இல்லை. அவர்கள் பித்தர்களைப்போல் இருப்பார்கள். அவர்கள் அதிசய சக்திகளை கொண்டிருப் பார்கள். அவர்களுக்கும் மரணம் உண்டு. அவர்களால் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
விஞ்ஞான-தொழில் நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் பெருக்கி காற்றையும், கடலையும், நீரையும், நிலத்தையும் மாசுபடுத்தினோம். மனிதனின் சுயநலனுக்காக காடுகளை அழித்தோம், அழித்துகொண்டிருக்கிறோம் அதனால் இயற்கையின் பருவநிலையை தடுமாற செய்திருக்கிறோம். இது மனிதனின் லொளகீக வாழ்க்கையின் பின்விளைவு.
விஞ்ஞான-தொழில் நுட்ப மயத்தை ஆதரித்தோம்.
துறவற வழ்க்கை வாழ்ந்த மனிதன் சொன்னதை புறந்தள்ளினோம்.
மனிதனின் உடல். அதில் இரண்டு முக்கிய உறுப்புகள். ஒன்று இதயம், இரண்டு மூளை.
முதலில் இதயம். இதயத்தின் துடிப்பு சுவாசத்தின் ரிதத்தை ஒட்டி இருக்கிறது. சுவாசம் என்பது உள்மூச்சு, வெளிமூச்சு என்னும் இயக்கத்தால் ஆனது. இதுவே உயிரின் இயக்கம். உயிர் பிரிந்து விட்டால் மூச்சு நின்று விடும். மூச்சு நின்று விட்டால் இதயம் நின்றுவிடும். இதயம் நின்றுவிட்டால் மனிதன் மரணம்.
இந்த இதய இயக்கத்தில் இருப்பதுதான் ஆன்மா என்னும் தெய்வத்துளி. இது உடல் என்பதன் எதிர்பதம். உடல் அழியும், ஆனால் ஆன்மா அழியாது. உடல் கண்ணுக்குத் தெரியும் ஆனால், ஆன்மா கண்ணுக்குத் தெரியாது.
அடுத்தது மூளை. மூளையானது மனத்திடம் அனைத்தையும் அற்பணிக்கக் கூடியது. மனமானது மூளைக்கு உத்தரவிடக்கூடியது. ஆனால், மனம் வைராக்கியத் திற்கு அடிமையாகக்கூடியது. வைராக்கியம் எதையும் சாதிக்க கூடியது. வைராக்கியம் ஆன்மா வையும் தரிசிக்க வைத்து சாதிக்கக் கூடியது. இதய இயக்கத்தில் இருக்கும் ஆன்மாவை மூளை வழியான வைராக்கியம் மூலம் மட்டுமே தரிசிக்க முடியும். மூளை உடலின் ஒரு பாகம். மனம் எண்ணங்களால் ஆனது. ஐம்புலன்களும் எண்ணங்களை உற்பத்திசெய்யும் மற்றும் எண்ணங்களை செயல்படுத்தும் கருவிகள். எண்ணங்களை நிறுத்தினால் அதன் பெயர் தியானம். ஆசைகளை நிறுத்தினால் அது கட்டுப்பாடு.
ஐம்புலன்களையும், எண்ணங்களையும்,ஆசைகளையும் நிறுத்துவது விரதங்கள், அதை பயிற்சி என்றும் சொல்லலாம். வெளிஉலக காட்சிகளை விரும்பாதவர்கள் இப்பயிற்சிகளை எளிதாக செய்தார்கள்.ஆன்மா இதய இயக்கத்தில் இருக்கும் தெய்வத்துளி. வைராக்கியம் என்பதும், ஆன்மா என்பதும் கண்ணுக்குத்தெரியாத சக்தி. வெளியுலகை துறந்த வைராக்கிய வான்களுக்கே ஆன்ம தரிசனம் சாத்தியமாயிற்று.
துறவு நெறி அதாவது, ஆன்மாவைத் தரிசிக்கும் வாழ்க்கை முறையால் இயற்கை நாசமடையவில்லை.
நுகர்வு நெறி அதாவது, விஞ்ஞான - தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் வாழ்க்கை முறையால் தான் இயற்கை மிக வேகமாக மாசடைகிறது.
துறவற வாழ்க்கை எல்லோராலும் வாழமுடியாது. சுகபோக வாழ்க்கை ஊதாரித்தன வாழ்க்கையாகும். இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையே சிறப்பானது.
இன்றைய சூழலில்,
எளிமையான உடை, எளிமையான உணவு, எளிமையான உறைவிடம். எளிமையே நோக்கம்.
கடமைகளை தட்டிக்களிக்காமல் இயன்றவரை முழுமையாக செய்துவிடல். முடியாதபோது முடியவில்லை என்பதை சொல்லிவிடுதல்.
எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், இக்கட்டான நிலையிலுள்ள அப்பாவிக்கும், தன்னால் இயன்றதை மனிதநேயத்துடன் செய்வது.
எங்கும் நியாயம், எதிலும் நியாயம், எப்போதும் நியாயம், நியாயமே தெய்வம் என நியாயமாய் நடப்பதை வாழ்வின் லட்சியமாய் கொள்ளுதல்.
தேவைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டே போகுதல். தனக்குள்ள வேலைகளை தானே செய்து கொள்ளுதல்.
எண்ணங்களை நிறுத்திய தியானம். ஆசைகளை நிறுத்திய விரதம்
போன்ற பயிற்சிகளை செய்தல்.
----------------------------------------------------
----------------------------------------------------
No comments:
Post a Comment