Thursday, 21 September 2017

                              திருமூலரின் கடவுள் விளக்கம்-2

1.அணுவின் அணுவினை ஆதிபிரானை 
  அணுவின் அணுவினை ஆயிரம் கூறிட்டு
  அணுவின் அணுவினை அணுகவிலார்க்கு
  அணுவின் அணுவினை அணுகலுமாமே.

(அணுக்குள் அணுவாய் இருப்பவன் இறைவன்.
இறைவனை பார்க்கவேண்டும் என்பவர்கள்
அணுவை ஆயிரம் கூறுபடுத்தினால் வரும் உப அணுவை 
பார்த்தால் இறைவனை காண்பார்கள்.)

2.உருவின்றியே நின்று ருவம் புணர்க்கும்
   கருவின்றியே நின்று தான் கருவாகும்
   அருவின்றியே நின்ற மாயப் பிரானைக்
   குருவின்றி யாவர்க்கும் கூடவொண்ணாதே.

( இறைவன் அருவமாய் இருந்தாலும் சகலவடிவங்களிலும் கலந்திருக்கக்கூடியவன்.
  தனக்கு எதுவும் மூலமாய் இல்லாமல், தான் பிற எல்லாவற்றிர்க்கும் மூலமாய் இருப்பவன்.
அருவமாய் இருந்தாலும் பிற உருவங்கள் மூலம் செயல்பட்டு மாயமாகிறவன்.
சிலருக்கு, சிலவழியில் குருவாய் இருந்து அருள்பவன்.)

3.அந்த மிலானுக்கு அகலிடந்தான் இல்லை
   அந்த மிலானை அளப்பவர் தாம் இல்லை
   அந்த மிலானுக்கு அடுத்த சொல் தான் இல்லை
   அந்த மிலானை அறிந்துகொள் பத்தே.

   ( முடிவற்ற சக்தியை உடைய இறைவனுக்கு குறிப்பிட்ட இடம் என்று எதுவும் இல்லை.
      எவரும் அவன் அளவை அளந்து சொல்லவும் முடியாது. அவனை விளக்கும் சரியான சொற்களும் இல்லை.அவனை அனுபவத்தால் அறிந்து கொள்ளுங்கள்.)

4.கரந்தும் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் 
    பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
    அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
    விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

   (அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன். கண்ணுக்குத் தெரியாதவன்.
   பரந்த சடையும், பசும் பொன் நிறமும் உடையவன்.அவனை நினைக் காதவர்களிடம்         நெருங்க மாட்டான்.எளிதாக பார்த்தால் வெண்ணிலவைப் போன்றிருப்பான்.)

5.ஆதிபடைத்தன ன் ஐம்பெரும் பூதம்
    ஆதிபடைத்தன ன் ஆசில் பல் ஊழி
    ஆதிபடைத்தன ன் எண்ணிலி தேவரை
    ஆதிபடைத்தவை தாங்கி நின்றானே.

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என ஐம்பெரும் பூதங்கள்தோன்ற காரணமாய் இருந்துஅவற்றோடுகலந்திருக்கிறான்.காலநேரம்ஏற்படகாரணமானான்.உயிர்களும்,
உயர்ந்தவர்களும் தோன்றக் காரணமானான். உலக படைப்புகளை கண்காணித்து வருகிறான்.)

6.உடலாய் உயிராய்உலகம் அது ஆகி
    கடலாய்க் கார்முகில் நீர்பொழிவான் ஆய்
    இடயாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி
    அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

( உடலாகவும், உயிராகவும், உலகமாகவும்,கடலாகவும்,இருண்ட மேகமாகவும்,
 மழைநீராய் கொட்டுபவனாகவும் இவைகளுக்கெல்லாம் இடைப்பட்ட வனாகவும்
அழியாதவனாயும், எங்கும் நிறைந்திருப்பவனாயும்,பிற வழிகளாகவும் இறைவன் நிற்கிறான்)

7.எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
  எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
  எங்கும் சிவமாய் இருத்தாலால் எங்கெங்கும் 
  தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே.

( அணுவுக்கு அணுவான உடலுடன், சக்தி பூர்வமாய், சிதம்பர இரகசியமாய், ஐந்தொழில் புரிபவனாய், இறைவனாய் பிரபஞ்சம் முழுவதும் தன் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். அணுவின் மையத்தில் புரோட்டனாக இருப்பதை சிவம் எனவும், புரோட்டானை ஒட்டினாற் போல் சுற்றும் எலக்டிரானை சக்தியாகவும், ஆக இறைவனை உணரலாம்)

8.ஒன்று கண்டீர் உலகுக் கொரு தெய்வமும்
    ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
    நன்று கண்டீர் இனி நமசிவாயப் பழந்
    தின்று கண்டேற்கிது தித்தித்த வாறே.

(அணுவுக்குள் அணுவான தெய்வம் ஒருவன் இந்த உலகம் முழுவதும் நிறைந்திருப்பதை உணரலாம்.அவனே இந்த உலக இயக்கத்துக்கு உயிராக இருப்பதையும் உணரலாம். சரியாக உணர்ந்தவர்கள் ஒரு கனியின் சுவை போன்று இறைவனை உணர்வார்கள்.கனி தித்திப்தைப் போல நமசிவாய இறைவனையும் உணரும் போது பெரு மகிழ்ச்சி அடைவார்கள்.)

9.மரத்தை மறைத்தது மாமத யானை
   மரத்தின் மறைந்தது மாமத யானை
   பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
   பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.

( மரத்தில் செய்யப்பட்ட தத்ரூபமான யானையை பார்க்கும் போது யானை செய்யப் பட்ட மரம் நினைவிற்கு வருவதில்லை. அந்த மரத்தை மட்டும் நினைக்கும் போது யானை நினைவுக்கு வருவதில்லை. இந்த உலகப் பொருட்களையும்,உயிரினங்களையும் பார்க்கும் போது பொருட்களும், உயிரினங்களும் உருவாக்க் காரணமான அணுவுக்கும் அணுவான அந்த பரம்பொருள் நினைவிற்கு வருவதில்லை. பரம் பொருளை ஊன்றி நினைத்தால் உலகத்தில் கண்ட எதுவும் நினைவிற்கு வருவதில்லை.)

10.தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
     வானுக்குள் ஈசனைத்தேடும் மதியிலீர்
     தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தால் போல்
     ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

( தேனின் சுவைக்கு உருவம் கிடையாது. பேரின்ப தெய்வமான ஈசனுக்கும் உருவம் கிடையாது.சொரூபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறிவின்மையாகும். தேனுள் சுவை சேர்ந்திருப்பது போல் உடலுள் ஈசன் உள்ளான்.)

11.தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
    ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
    சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு
    தாயினும் நல்லன் தாழ் சடையோனே.

இறைவன் தீயைவிட வெப்பமானவன். தண்ணீரைவிட குளிர்ச்சியானவன்
                            (கடுமையானவன்- கருணையானவன்)
குழந்தையை போன்று, தாய்மையை போன்று நல்லவன். நல்ல அடியார்களுக்கு நெருக்கமானவன்.)

12.கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
     கண்காணி இல்லாத இட மில்லை. காணுங்கால்
     கண்காணியாக க்கலந்தெங்கும் நின்றானைக்
    கண் காணி கண்டார் களவொழிந்தாரே.

( தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று பல திருட்டுத் தனங்களைச் செய்பவர்கள்உண்டு.
இறைவனின் கண்காணிப்பு இல்லாத இடமே இல்லை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து விட்டவர்கள் திருட்டுத் தனமாக கூட எந்த தப்பையும் செய்யமாட்டார்கள்.)

13.உள்ளத்து ஒருவனை உள்ளுறு ஜோதியை 
     உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
     உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
     உள்ளம் அவனை உருவறி யாதே.

(ஜோதி வடிவாகவும் உள்ளத்தில் தோன்ற க்கூடிய இறைவன் உள்ளத்திலேயே இருந்தும் உள்ளத்தில் வேறு வகையான வேட்கைகள் நிரம்பி இருக்கும் வரை உள்ளம்  இறைவனை உணர்வதில்லை)

14.சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
    அவனோடு ஒப்பார் இங்கே யாவரும் இல்லை
    புவனம் கடந்தன்று  பொன்னொளி மின்னும்
    தவனச் சடைமுடி தாமரையானே.

( அணுவுக்குள் அணுவான பொன்னிற மான இறைவனுக்கு சிவன் என்று பெயர் சூட்டினார்கள். அந்த சிவனுக்கு ஒப்பான தெய்வம் இல்லை. அவன் பிரபஞ்சம் முழுவதும் ,அண்டம் கடந்தும் பொன் போன்று பிரகாசித்து நிற்பவன். அவன் அன்பர்களின் நெஞ்சத்தாமரையிலும் உறைகிறவன்)

15.ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
     நின்றன ன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
     வென்றன ன் ஆறு விரிந்தன ன் எழும்பர்ச்
    சென்றன ன் தானிருந்தான் உணர்ந்தெட்டே.

    (இறைவன் ஒருவனே. அறம்,மறம் என இருவழிகளில் இறைவன் உயிர்களுக்கு அருள் கிறான்.பதி, பசு, பாசம் என மூன்றாகி நின்றான். நான்கு வேதங்களாலும் உணர்த்தப் படுகிறான்.ஐம்புலன்களின் தாக்கம் அவனிடம் கிடையாது. உயிர்களுக்கு ஆறு அறிவைக் கொடுத்து சரி-தவறை கண்காணிக்கிறான். மனிதனின் ஏழாவது சக்கர ஸ்தானத்தில் மனிதனின் உய்வை வைத்தான்.ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,நிலம், சூரியன்,சந்திரன்,ஆன்மா ஆகிய எட்டையும் உணர்ந்து ,போற்றி, கேடு ஏற்படாமல் பயன் படுத்தி மனிதன் வாழவேண்டும் என்பது அவன் கட்டளை.) பாடல் களுக்கு்பல விதமான விளக்கங்கள் உள்ளன.
                                                                                  ....................தொடரும்.3

   




                                           திருமூலரின் கடவுள் விளக்கம்-1

திருமூலர் ஒரு சிறந்த யோகி, ஞானி, ரிஷி, சித்தர், மருத்துவர்,விஞ்ஞானி, இறைவனை தன்னுள் கண்டவர்,பிற மனிதர்களுக்கு வழிகாட்டி என பலவாறு அவரைப்பற்றி உயர்வாகப் பேசலாம். அனைத்திற்கும் அவர் தகுதி உடையவர். அவர் வாழ்ந்த காலத்தை யாராலும் உறுதியாக கூறமுடிய வில்லை. ஆனால் அகத்தியர், பதஞ்சலி முனிவர் போன்றோர் வாழ்ந்த காலத்தில் திருமூலரும் வாழ்ந்தார் என்பதற்கு பல குறிப்புகள் உள்ளன. எனவே ஒரு 3000 வருடங்களுக்கு முற்பட்டவர் என எடுத்துக் கொள்ளலாம்.

கடவுள் இருக்கிறாறா இல்லையா என்பது பற்றி தலைமுறை, தலைமுறையாக விவாதங்கள் நடை பெற்று வருகின்றன.கருணையான, ஆச்சரியமான சம்பவங்கள் தனது வாழ்க்கையில், உலகில் நடக்கும் போது அதை தெய்வாதீனம் என்று கடவுள் இருப்பை உறுதி செய்கிறோம். கொடுமையான, அதிர்ச்சியான சம்பவங்கள் தனது வாழ்வில், உலகில் நடக்கும் போது தெய்வம் இருந்தால் இப்படியெல்லாம் நடப்பதை அனுமதிக்குமா என்று பேசுகிறோம்.

கடவுள் என்னும் ஒரு மறை பொருள் சக்தியின் செயல்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்கின்றனர் நமது ஞானிகள். அது அணுவுக்குள் அணுவாய்  இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருந்து தனது சட்ட திட்டங்களை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. உலகப் பொருட்கள் அனைத்தும் அதனுள் மூழ்கி கிடக்கின்றன. இறை சக்தியானது எங்கும் நிறைந்திருந்தும் தெரியாத மறை பொருளாய் இருக்கிறது.

இயற்கையில் காணும் உயிரினங்களில் மனித இனம் மிக உயர்ந்தது. மனித இனத்தால் விஞ்ஞான வழியில் வாழ்ந்து துன்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும், மெய்ஞ்ஞான வழியில் வாழ்ந்து துன்பத்தை குறைத்துக் கொள்ளவும் முடியும்.

அணுவுக்குள் அணுவாய் இருக்கும் கடவுளை திருமூலர் எளிய பாடல்கள் மூலம் விளக்கியிருக்
கிறார். எல்லோரும் கடவுளை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல உதாரணங்களால் விளக்கி இருக்கிறார்.அவருக்கு பின்னால் வந்த இறை ஞானிகளும் அந்த உதாரணத்தினை ஏற்று கடவுளை போற்றி வாழ்த்தி வழிபட்டு வந்திருக்கின்றனர். இன்று அந்த உதாரணங்கள் தான் கடவுள் என்று அரை குறையாய் நம்பி தேவைக்கேற்ப நாம்மில் பல பேர் உதாரணங்களை வழிபட்டு வருகிறோம். இன்னும் பலர் அந்த உதாரணங்களை ஏற்காமல் விவாதம், விமர்சனம் செய்து வருகின்றனர். கடவுளை பயன் படுத்திக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு திருமூலரின் இந்த பாடல்கள் அவர்களது கடவுள் நம்பிக்கையை மேலும் திடமாக்க உதவும்.உறுதியான நம்பிக்கை இல்லாத வரைஇறைவனை பயன்படுத்திக் கொள்ள முடியாது.
                                                                                                          ...............தொடரும் 2
                                         





கடவுள்




Friday, 14 October 2016

                         தனிமனித பொறுப்புகள் 

உயிரினங்களில் மனித இனம் உயர்ந்தது. காரணம் மனிதனுக்கு மனம் என்பது கூடுதலாக இருக்கிறது. அந்த மனத்தால் சிந்திக்க முடியும் சிந்தித்ததை வெளிப்படுத்தமுடியும்,  சிந்தித்ததை செயல்படுத்தவும் முடியும். மனித சிந்தனை எல்லையற்றது, கட்டுப்பாடற்றது. ஆனால் இயற்கையின் செயல்கள் அனைத்திற்கும் எல்கையும் கட்டுப்பாடும் உண்டு. வெயிலுக்கு மழையும், மழைக்கு வெயிலும் என எல்கையும் கட்டுப்பாடுமாக இருக்கிறது. காற்றிலுள்ள பிராணவாயுவை மனிதனுக்கும், மனிதன் வெளியேற்றும் கரியமலவாயுவை தாவரங்களுக்கும்  என எல்கையும்  கட்டுப்பாடுமாக இருக்கிறது. இது போன்று இயற்கை எல்லாவற்றையும் ஒரு சுழற்சிக்குள் ஏற்பாடு செய்திருப்பதால் இந்த உலகம் ஒரு சீராக எல்கையும், கட்டுப்பாடு  மாக இயங்கி வருகிறது.

மனித மனத்தின் சிந்தனையும் செயலும் இந்த சுழற்சி தத்துவத்தை கடைபிடிப்பது கிடையாது. மனிதன் இயற்கையிலுள்ள பொருட்களில் இருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டாத கழிவுகளை இயற்கை மீது எறிந்து விடுகிறான். மனிதன் இயற்கையின் மீது கொட்டும் கழிவுகளால் ஐம்பொருட்களும் மாசடைவது பற்றியோ, இதர ஜீவராசிகளின் அழிவு பற்றியோ மனிதன் கவலைப்படவில்லை. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது என்பது மனிதனுக்கு நன்றாகவே தெரியும். இதன் விளைவு தான் இன்றைய காலநிலை மாற்றங்கள், மாசு, நோய்கள், போட்டி, பொறாமை, வறுமை, ஆடம்பரம், சுயநலம், இல்லாமை, தீவிரவாதம் போன்று பல்வேறு பிரச்சினைகளாய் வெளிப்பட்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு, வீட்டுக்குள், தனிமனிதனுக்கு என பலவகையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை அறிவோம். இயற்கை பேணும் எல்கை, கட்டுப்பாட்டு சுழற்சியை மனிதனும் பேணி கட்டுப்பாடுடன் விஞ்ஞானத்தை வளர்த்திருந்தால் வாழ்க்கை அனைவருக்கும் இனிப்பாய் இருந்திருக்கும்.  

அறம் பேணு 
 கடமை என்று வரும் போது பலனை எதிர் பாராமல் செய்வது
ஆதிக்கம் செய்யாமல் அடுத்தவர்  உரிமைகளை மதித்து  நடப்பது.
எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நியாயமாய் நடந்து காட்டுவது .
பிறர் கஷ்டம் உணர்ந்து  தன்னால் இயன்றதை வலிய செய்வது 

இயற்கை பேணு 
சுயநலம் பின்விளைவை கருத்தாமல் போனால்,
                                               சுயநலம் பின்பலனை சிதைத்து விட்டுப்போகும்
பரஸ்பரம் மரியாதையை கருதாமல் போனால்,
                                              பரஸ்பரம் தொடர்பு இல்லாமல் போகும்
உதவும்பொருளை கருதாமல் போனால்,
                                              கருதாத பொருள் உதவாமல் போகும்,
மனசாட்சி கடவுள்பயம் கருதாமல்போனால்.
                                              கடவுள்நீதி மனசாட்சி இல்லாமல் போகும்

உடல் பேணு 
உடல் இயங்கும் விதத்தை தெரிந்திருப்பது
உடலை வழிநடத்த  மனக்கல்வி பழகுவது
உடல் உழைப்பில் விவசாயம் முதன்மையானது
உடல் நலத்திற்கு உணவே மருந்தாக வேண்டும்.

எளிமை பேணு 
விஞ்ஞான வளர்ச்சியால் சுகாதாரம் அழியும்
ஆடம்பர வளர்ச்சியால் வளங்கள் அழியும்
சொகுசு வளர்ச்சியால் வலிமை அழியும்
கட்டுப்பாட்டின் வளர்ச்சியால் துன்பம் அழியும்

விளக்கம் 

அறம் பேணு 
ஒவ்வொரு தனி மனிதனும் பேண வேண்டிய சில பொது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் இனிமையாய் வாழ நம் முன்னோர்கள் நன்னடத்தை, மதிப்பு, ஒழுக்கம் என்கிற சில நற்செயல்களை பொதுவாக்கி அதனை அறம் என்று சொல்லி குருகுல கல்வியில் போதித்தார்கள். ஒவ்வொருவரும் இந்த அறத்துடன் தன குணத்தை ஒப்பிட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவேண்டியது அவரவர் கடமையாகும் என்றார்கள்  .ஆனால், நாம் அப்படி செய்யாமல், நம்மை பிறருடன் ஒப்பிட்டு அவர்களைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ ஆரம்பிக் கிறோம் அறம் கூறும் வழியினை தொலைத்து விட்டு துன்பப் படுகிறோம். தற்கால கல்வி பணம் சம்பாதிக்கும் வழியினை மட்டுமே சொல்லித்தருகிற கல்வியாகி விட்டது என்பதை அனைவரும் அறிவோம். மனம் போகும் போக்கில் போவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும், பிறரிடம் பகை கொள்வ தற்கும், பிறரை ஆதிக்கம் செய்வதற்கும், தனது பலத்தால் பிறருக்கு பாதிப்பினை ஏற்படுத்தவும், நிரபராதி யார் என்று விசாரிக்காமல் தண்டிக்கவும், உண்மைகளை மறைத்து சாமர்த்தியம்  பேசுவதற்கும், அனைத்து தரப்பினரும், அனைத்து துறையிலுள்ளவர்களும் எந்த பயமும் இல்லாமல் நடப்பதை கண்கூடாக காண்கிறோம். அறம் என்பதை தனிமனிதன் பேணாமல் போனதால் தனிமனித கட்டுப்பாடுகள் என்பது இல்லாமல் போய்விட்டது. பின்விளைவாக மனஅழுத்தம் நிரந்தரமாகி விட்டது. அது ஒருத்தரை ஒருத்தர் நிம்மதியாக வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

இயற்கை பேணு 
1.நாம் காணும் இயற்கை நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மகாசக்தியின் வெளிப்பாடு என விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் சொல்லுகிறார்கள். மனிதன் பயப்படவேண்டியதற்கு பயந்து வாழவேண்டும் என்பதை பழமொழிகளிலும், நீதிகளிலும் மிக அழுத்தமாய் நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும், மனசாட்சிக்கும், அரசு சட்டங்களுக்கும், இயற்கை நியதி ( தெய்வ நீதி ) களுக்கும் பயந்து வாழ்பவர்கள் அரிதாகி வருகிறார்கள். அதனால், மறுபுறம்  குற்றங்களும், பாதிப்பு களும் அதிக மாகி வருவதை காண்கிறோம். 2.தனக்கு உதவும் இயற்கை பொருட்களை பேணாமல் வளர்ச்சி, முன்னேற்றம் என எல்லா வளங்களும் மாசுபடுவதற்கும், அழிந்து போவதற்கும் அவை நமக்கு உதவாமல் போவதற்கும்  நாமே காரணமாய் இருக்கிறோம். 3.நாம் உறவாடும் ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது. நமது வலிமையின் ஆணவத்தால் பிறரின் சுயமரியாதையை அலட்சியப்படுத்தி நடக்கும்  போது நாளடைவில் அந்த உறவு முறிந்து போய் விடுகிறது. 4.தனது ஆசைகள், காரியங்கள் தான் முக்கியம் என சுயநலமாய் நடக்கும் போக்கினால் பின்னால் வரப்போகும் நல்ல தருணங்களை இழந்து விடுகிறோம். நம் கண்முன் இருக்கும் சக மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் என அனைத்தும் மனிதனால் பேணவேண்டிய இயற்கையாகும்.ஆனால், நமக்கு அதுமாதிரி கல்வி தரப்படவில்லை. இது போன்று இயற்கையை பேணுவதை கைவிட்டதினால், வீட்டிலும், நாட்டிலும், உலகிலும் நியாயமற்ற போக்குகள் ஏற்பட்டு தீராத பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே போவதை காண்கிறோம். தனக்கு தேவையான வெளியே காணும் பிற அனைத்தும் இயற்கையை சார்ந்தது. அவற்றை மதித்து, பேணிக் கொள்ளவேண்டியது அவரவர்களின் பொறுப்பாகும் .

உடல் பேணு 
1.வாழ்க்கைக்கு ஆதாரம் உடல். அந்த உடல் இயங்கும் விதத்தை அறிந்து வைத்திருப்பது அனைவர்க்கும் நல்லது. 2.உடலில் முக்கிய மானது ஐம்பொறிகள். அந்த ஐம்பொறிகளையும் ஆட்டிப்படைப்பது மனம். அந்த மனதிற்கு நாம் தான் கல்வி கொடுக்கவேண்டும் ( Educate the Mind ). ஏனென்றால் மனதிற்கு நல்லது-கெட்டது, சரி-தவறு தெரியாது. மனம் ஆசைப்படுவதை எப்படியாவது அடைந்து விட நினைக்கும் ஒரு சக்தி. 3.உடலுக்கு உழைப்பு வேண்டும். உடல் உட்கார்ந்தே இருப்பதற்காக படைக்கப்பட்டது அல்ல. விவசாயம் ஒன்றே மனிதனுக்கும் இயற்கைக்கும் உகந்த ஒரே தொழில். மற்றெல்லாம்  பின்விளைவு உள்ள தொழிலாகும். 4.நாம் உண்ணும் உணவு உடலுக்கு சத்தாகவும், மருந்தாகவும் இருக்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு உணவுவகைகளை சொல்லிக்கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள். ஆனால் நாம் ருசிக்காகவும், மேலைநாட்டு உணவே சிறந்தது என்றும் உணவே மருந்து என்னும் நல்ல பழக்கத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். அதன் பின்விளைவாக மருத்துவமனைகளும், செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போவதையம் காண்கிறோம். அவரவர் உடலைப் பேணுவது அவரவர்களின் முக்கிய கடமையாகும்.

எளிமை பேணு 

1.தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித இனத்திற்கு நன்மை செய்கிறது என்கிற நோக்கத்தில் மனிதன் விஞ்ஞான - தொழில்நுட்பத்தை எந்த பின்விளைவு களையும் பொருட்படுத்தாமல் வளர்த்துக்கொண்டு போகிறான். ஆனால், இந்த உலகம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மனித சக்தி மட்டுமே உயர்ந்ததும் அல்ல. அதற்கும் மேலே, இயற்கையின் நியதிகள் இருக்கிறது. இயற்கையின் சுழற்சிகள் இருக்கிறது. இயற்கையின் புதிரான மாற்றங்கள் இருக்கிறது. இயற்கையில் பல்வேறு ஜீவராசிகள் இருக்கிறது, மேலும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிதாய் பல்வேறு ஜீவராசிகள் உற்பத்தியாக இருக்கிறது. இவையெல்லாம் மனித சக்திக்கு உட்பட்டதல்ல. மனிதனுக்கு சவால்விடுவதாக கூட இருக்கலாம். அதனால், அளவிற்கு மீறி இயற்கையின் சுகாதாரம் பாதிக்கும் படியான விஞ்ஞான - தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதல்ல. 2. மனித இனம் ஆடம்பரங்களை அனுபவிக்க இயற்கையின் வளங்களை அழித்து இயற்கையின் சமநிலையை சீர்குலையும் படி செய்கிறது. இதை மனித இனம் மட்டுமே செய்கிறது. 3.மனிதனின் சொகுசுக்கு அளவே இல்லை. உணவாகட்டும், படுக்கையாகட்டும், பொருட் களாகட்டும் சொகுசையே நோக்கமாக கொண்டு வியாபாரிகள் புதுப்புது வகைகளை விற்பனைக்கு கொண்டுவருகிறார்கள். அதன் பின்விளைவாக மனிதன் வலிமை இழந்து சிறுவயதிலேயே மருத்துவத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுவதை காண்கிறோம். மனிதனுக்கு மட்டுமே மருத்துவ மனைகள் பெருகிக்கொண்டு போவதே இதற்கு சான்று. 4.கட்டுப்பாடாய் வாழ்வதும் கஷ்டம். மாசடைந்த சுற்றுப்புறத்தில் வாழ்வதும் கஷ்டம். கட்டுப்பாடாய் வாழும்போது மனதில் வலிமையையும், உடலில் தெம்பும் நிறையவே இருக்கும். ஆனால், நாகரீக வாழ்க்கையின் பின்விளைவான பலவீனம், நோய், விலைவாசி, தாழ்வுமனப் பான்மை போன்றவைகள்  வாழ்க்கையை நிம்மதி யில்லாமல் ஆக்கி விடுகிறது.  

மனிதன் பேணவேடியதை பேணாமல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் பல அதிசயங்களை கைக்குள் கொண்டு வருவதால் இந்த இயற்கை இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறுமா, மனித பிரச்சினைகள் தீருமா, எல்லா உயிர்களுக்கும் அமைதியான சூழ்நிலை கிடைக்குமா. விஞ்ஞான வளர்ச்சி நாட்டுக்குநாடு ஆடம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்த்துள்ளது. மனிதருக்கு மனிதர் ஆடம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்த்துள்ளது. இதனால் இயலாமையும், பொறாமையும், வெறுப்பும் பலவாறாக வெளிப்படுகிறது.

 மனிதன் முதலில் கட்டுப்பாடுகளை பேணவேண்டும். அதாவது, மனிதனது கண்டுபுடிப்புகள் அனைத்தும் இயற்கை சுழற்சி போன்று முழுமை பெற்றதாக இருக்கவேண்டும். அது முடியுமா, நாம் வெகுதூரம் வந்து விட்டோம்.

                          -------------------------------------------------------------